Sunday, April 20, 2014

குருஞ்சாக்குளம் -2 வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதி வைத்துக்கொள்கிறது...



குருஞ்சாக்குளம் படுகொலை பற்றி எழுதிக்கொண்டிருந்த போது நண்பர் ஜெயபால் ஒரு பாடலை கேட்கச்சொல்லி கொடுத்தார். அதில் அ.மார்க்ஸ் முன்னுரை கொடுக்க ரவிக்குமார் பாடல் வரிகளில் கே.ஏ.குணசேகரன் பாடி வெளியான மனுசங்கடா இசைத்தொகுப்பில் குருஞ்சாக்குளம் படுகொலை பற்றி ஒரு பாடல் வரலாற்று சாட்சியமாய் பதிவாகியிருந்தது. அந்தப் பாடல் குருஞ்சாக்குளத்தைப் பற்றிய நினைவுகளை கிளறிவிட்டு தூக்கம் தொலைத்தது.





இந்த குருஞ்சாக்குளம் படுகொலைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது பேசியிருக்கிறார்களா? என்றால், ஆமாம், பேசியிருக்கிறார்கள். 2006 –ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது முத்துவேல் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். “கலிங்கப்பட்டியில் இரண்டு தலித்துகளின் படுகொலைக்கு காரணமானவர் வைகோ.” என்பதுதான் அந்த அறிக்கை. எல்லாவற்றையும் நினைவாற்றலோடும் புள்ளிவிவரங்களோடும் அறிக்கை வெளியிடும் கருணாநிதி இந்த அறிக்கையை இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும் சம்பவம் நடந்த ஊர்பெயரையும் மாற்றி சொன்னார். படுகொலை நடந்தது 1992 –ல் ஆனால், இதை கருணாநிதி 2006 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட வேண்டிய காரணம் என்ன?
தலித் பேந்தராக இருந்து விடுதலை சிறுத்தைகள் என அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்து, 2000 -ம் ஆண்டுக்கு முன்பு வரை தேர்தல் பாதை திருடர்கள் பாதை, என்று தேர்தல் அரசியலை புறக்கணித்தார்கள். பின்னர் தலித்துகளுக்கு பாராளுமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால், இரட்டை வாக்குரிமைதான் தீர்வு என்று பேசியவர்கள், தேர்தல் அரசியலை புறக்கணிப்பதனால் ஏற்படும் ஒரு இயக்கம் எதிர்கொள்ளும் சாதக பாதகங்களைக் கருத்தில்கொண்டு 2001 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினார்கள். பிறகு மீண்டும் 2006 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்கள். 2006 ம் ஆண்டு தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அதிமுக, மதிமுக கூட்டணியில் போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தல் அரசியலை சாதி வெறி, மதவெறி அடிப்படைவாதிகளோடும் சேர்ந்துதான் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் சமத்துவ சாபம்.
கருணாநிதியின் அறிக்கையைக் கேட்ட ஜெயலலிதா கருணாநிதிக்கு பதிலடி கொடுக்க அன்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை அழைத்து அந்த படுகொலைக்கு வைகோ காரணமல்ல என்று பேட்டி தரச்சொன்னார். திருமாவளவனும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அவரது வீட்டுக்குச் சென்று வைகோவுடன் இருந்து பேட்டி கொடுத்தார். வைகோவும் இதுதான் சமயமென்று குருஞ்சாக்குளம் படுகொலையின் ரத்தக்கறையை திருமாவளவனை வைத்து துடைத்துக்கொண்டார். அப்போது அந்தப் பகுதியின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் சென்றார்கள். திருமாவளவனைச் சந்தித்து மரியாதை செய்துவிட்டு இந்த கொலைகளைச் செய்தவர்களைக் காப்பாற்ற வைகோவும் வைகோ தம்பியும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று உண்மையைக் கூறினார்கள். உண்மையில் அன்று திருமாவளவனுக்கு தர்மசங்கடமாகித்தான் போனது. தேர்தலில் வெற்றிபெற தலித்துகளின் ஓட்டு மட்டும் போதாது சாதி இந்துக்களின் ஓட்டும் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த நாட்டில் அவர்களுடன் சேர்ந்து காலம் தள்ள வேண்டியிருக்கிறது. தேர்தல் அரசியலின் சிக்கலை திருமாவளவன் அன்றே புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
குருஞ்சாக்குளத்திலிருந்து இந்த வழக்கை நடத்திய தலித் இளைஞர்கள் வழக்கு நீதிமன்றத்தில் தோற்றுப்போனபோது இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து விரக்தியடைந்து இந்த அரசியலைவிட்டு வெளியேறினார்கள்.
குருஞ்சாக்குளம் கடந்த 22 ஆண்டுகளில் நிறைய மாறித்தான் இருக்கிறது. அங்கே அந்த படுகொலை சம்பவத்தை யாரும் இன்னும் மறந்துவிடவில்லை. காந்தாரியம்மன் கோயில் இன்னும் குட்டிச்சுவராகத்தான் நிற்கிறது. ஆனால், சர்க்கரையின் மகன் வளர்ந்துவிட்டிருக்கிறான். இன்னொரு தலைமுறை வளர்ந்து வந்துவிட்டார்கள். ஆதிக்க சாதிகளுக்கு எதிராகப் பேச.
தேர்தல் அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் பெறுவதில் தலித்துகளின் குரல்வளையை நெறித்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் ஜனநாயக கொலைச்செயலை தலித்துகள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். முதல் பத்து ஆண்டுகளில் இரட்டை உறுப்பினர் இருந்தபோது உறுப்பினராக இருந்த எல்.இளையபெருமாள் போன்றவர்களின் காலத்தில் தலித்துகளின் குரல் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக ஓங்கி ஒலித்தது. அதற்கு பின்னர் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டது. தலித் வேட்பாளர்கள் வெற்றிபெற சாதி இந்துக்களின் ஓட்டும் தேவை என்பதால் அவர்களுன் ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தலித் அரசியல் தலைவர்கள் தேர்தல் அரசியலில் திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் சேர்ந்து சோரம் போகிறார்கள் என்று அதே சோரம் போகிற வேலையைச் செய்துகொண்டு குற்றம் சாட்டும் சாதி இந்துக்கள், தலித்துகள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதியின் குரல் ஒலிக்க அவர்கள் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கையைப் பற்றி மறந்தும்கூட வாய்திறப்பதில்லை.
சாதி ஒழிப்பு என்பது சாதியை எதிர்த்தோ மறுத்தோ மட்டும் பேசுவது ஆகிவிடாது. சாதி ஒழிப்பு என்பது தலித்தாக மாறி தலித்துகளாக தலித் மக்களுக்காக பேசுவதுதான் உணமையான சாதி ஒழிப்பு வழியாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment