Tuesday, January 10, 2012

நாங்கள் பேசினால் அது

நாங்கள் பேசினால் அது

அமைதியைக் குலைக்கும் பேச்சு என்கிறார்கள்.

நாங்கள் எழுதினால்

ரசனை இல்லாத எழுத்து என்கிறார்கள்.

எங்கள் பேரறிவை அவர்கள்

திமிர் என்கிறார்கள்.

எங்கள் உரிமைக்காக போராட

வீதிக்கு வந்து மறித்தால்

அதை அராஜகம் என்கிறார்கள்.

அவர்கள் அடிக்கும் போது

திருப்பி அடித்தால் வன்முறை என்கிறார்கள்

அவர்களோடு சேர்ந்திருந்தால் தேசியம் என்கிறார்கள்

நாங்கள் ஒன்று சேர்ந்தால்

சதி செய்கிறார்கள் கலவரக்காரர்கள் என்கிறார்கள்

எங்கள் தலைவரைப் போற்றுகிறோம் என்றால்

அடிமைகளுக்கு தலைவன் கூடாது என்கிறார்கள்

எங்கள் புரட்சி அடையாளத்தை அறிவிக்கும்போதெல்லாம்

அடிமை என்பதைத் தவிர

உங்களுக்கு வேறேது அடையாளம் என்கிறார்கள்

எங்கள் திமிறலில்

அவர்களின் பிடி தளரும்போதெல்லாம்

சாமர்த்தியமாய் கலவரமென

சுட்டுப்படுகொலை செய்கிறார்கள்

ஆனாலும்... ஆனாலும்...

அவர்களுக்கான விடுதலையையும்

திசையதிர அறிவிக்கிறோம்...