Wednesday, April 2, 2014

வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதிவைத்துக்கொள்கிறது…


குருஞ்சாக்குளம் இந்த பெயரை தமிழக மக்களுக்கு நினைவில்லாமல் போயிருக்கலாம். ஆனால், கோவில்பட்டி, சங்கரன்கோயில் சுற்றுவட்டார தலித் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1992  மார்ச் 16 -ல் இரவு சினிமா பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர்களை, நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த  23 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து அவர்களின் ஆணுறுப்பை அறுத்து அவர்களின் வாயில் திணித்துவிட்டுச் சென்ற கொடூரமான நிகழ்வு நடந்தது குருஞ்சாக்குளத்தில்தான்.
இந்த படுகொலை வழக்கு நீதிமன்றத்தில்  சரியான சாட்சிகள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிக்காமலேயே வழக்கைத் தூக்கி பரணில் போட்டுவிட்டது.

1.சர்க்கரை, 2.சுப்பையா, 3.அம்பிகாபதி, 4.அன்பு (அன்பு திருவிழாவுக்காக எஸ்டேட்டிலிருந்து குருஞ்சாக்குளத்திற்கு வந்தவர்) இந்த 4 தலித்துகளும் இப்படி கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிற அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். குருஞ்சாக்குளத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஆதிக்க சாதியினர் நாயக்கர்கள்தான். ஊருக்கு பக்கத்திலேயே தலித் குடியிருப்புகள். தலித் மக்கள் தங்களின் சாமியான காந்தாரி அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து கோயில் கட்டடத்தை எழுப்புகிறார்கள். காந்தாரியம்மன் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து எதிர்புறத்தில் நாயக்கர்கள் சமூகத்தின் மண்டபம் அமைந்திருக்கிறது. தலித்துகளின் கோயில் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே கட்டுவதா என்று நாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த இடம் குருஞ்சாக்குளம் தலித்மக்கள் பகுதியில் இருக்கும் அரசு நிலம். இவர்களுடைய ஒரே பிரச்சினை தலித்துகளின் சாமியே ஆனாலும் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே எழுந்துவிடக்கூடாது என்பதுதான். அங்கேதான் கோயில் கட்டுவோம் என்று எதிர்க்குரல் எழுப்பிய சர்க்கரை சுயமரியாதை மிக்கவராக இருந்தது நாயக்கர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சர்க்கரையையும் அவருக்கு துணையாக இருப்பவர்களையும் கொன்றால்தான் இந்த ஊர் தலித்துகள் அடங்குவார்கள். என்று திட்டம்போட்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்கள். படுகொலை செய்தவர்களை காவல்துறை கைதுசெய்த போது குருஞ்சாக்குளம் நாயக்கர்கள் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். அதில் முக்கியமானவர்கள் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன். இந்த வழக்கை நாயக்கர்கள் தரப்பிலிருந்து நடத்தியவர் அன்றைக்கு அந்தப் பகுதியில் மதிமுகவில் செல்வாக்கு பெற்றிருந்த ராதாகிருஷ்ணன். இவர் இப்போது திமுகவில் மாநில செய்தித்தொடர்பாளராக இருக்கிறார்.
கோவில்பட்டி, சங்கரன்கோயில் இந்தப்பகுதி முழுவதும் நாயக்கர்களின் ஆதிக்கம்தான். இந்தப் பகுதி ஊர்களில் எந்த இடத்திலும் திமுக, அதிமுக, என எந்தக் கட்சியின் கொடிகளோ, சுவர் விளம்பரங்களோ பார்க்கவே முடியாது. எல்லா இடங்களிலும் மதிமுக கொடியும் வைகோவும்தான். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் பாதுகாப்பாக விடுதலை ஆகிறவரை  வைகோ, வைகோவின் தம்பி ரவிச்சந்திரனின் செல்வாக்கு பணம், படை என்று தாராளமாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த கட்சி ஆட்சி என்றாலும் வைகோ நாயக்கருக்கு இங்கு  பெரிய செல்வாக்குதான். அங்கே இவர் பின்னாடி இருப்பவர்கள் இவரின் திராவிட பாரம்பரியம், என்பதற்காகவெல்லாம் இல்லை. இவர் ஒரு நாயக்கர். நாயக்கர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வைகோவைக் கொண்டாடுகிறார்கள். வைகோவும் நாயக்கராகவே இருக்கிறார்.
இன்றைக்கு குறிஞ்சான் குளத்தில் நாயக்கர்களின் மண்டபத்தை மறைக்கும்படி வீடுகள் எல்லாம் கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைக்கும் அன்று காந்தாரியம்மன் கோயில் கட்டுவதற்காக எழுப்பப்பட்ட பீடத்துடன் அதே நிலையில் நிறைவடையாமலேயே நிற்கிறது. 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த கொடூர நிகழ்வை நினைவுகூறக்கூட தயங்குகிறார்கள் குருஞ்சாக்குள தலித்மக்கள்.

22 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் குருஞ்சாக்குளம் தலித் மக்களின் காந்தாரியம்மன் கோயில்


அப்பகுதியில் எல்லா நிறுவனங்களும் நாயக்கர்களுடையதுதான். பெரும்பாலான நிலமும் நாயக்கர்கள் வசம்தான் உள்ளது. நாயக்கர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிற தலித்துகளுக்கு அவர்களின் காடுகளில் வேலை கிடையாது. அவர்களின் நிறுவனங்களில் வேலை கிடையாது. வேறுவழியில்லாமல் தலித் மக்கள் நாயக்கர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கிப்போக வேண்டியிருக்கிறது. இந்த ஆதிக்க சாதிவெறி நாயக்கர்களின் நாயகனாக இருப்பவர்தான் வைகோ.
இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே ஒரு ஒற்றுமைதான் இருக்கிறது. அது சாதியம். அந்த சாதியம் மாநிலத்திற்கு மாநிலம், வட்டாரத்திற்கு வட்டாரம் அதன் தன்மைகள், சிக்கல்கள் மட்டுமே மாறுபட்டிருக்கிறது. வட தமிழகத்தைவிட தென் தமிழகம் சாதிய அமைப்பிலும் ஒடுக்குகிற ஆதிக்க சாதியினரின் தன்மையும் ஒடுக்கப்படுகிற தலித்துகளின் எதிர்ப்புத் தன்மையிலும் மாறுபட்டதாக மிகவும் இறுக்கமானதாகத்தான் இருக்கிறது.
தென் தமிழகத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்கத்தை தலித்கள் யார் எதிர்த்தாலும் அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இப்படி உரிமைக்குரல் எழுப்புபவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அங்கே மற்றவர்கள் யாரும் எதிர்த்து குரல் எழுப்ப முடியாதபடி அச்சுறுத்தப்படுகிறார்கள். அப்பகுதியில் மீண்டும் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு எதிர்க்குரல் எழ ஒரு தலைமுறையாகிவிடுகிறது.
ஆதிக்க நாயக்க சாதிவெறியைத் தூபம்போட்டு அனையாமல் மதிமுக என்ற பெயரில் அரசியலாக காத்துவருகிறார்கள் சங்கரன் கோயில் வட்டார நாயக்கர்கள். ஆதிக்க சாதிவெறி நாயக்கர்கள் செல்வாக்கு கறையை மறைக்கத்தான் வையாபுரி கோபாலசாமி நாயக்கருக்கு ஈழத்தமிழர் அரசியலும், திராவிட அரசியலும், தமிழின அரசியலும் தேவைப்படுகிறது.
இப்போது வையாபுரி கோபாலசாமி நாயக்கர் சாதிவெறி ராமதாஸோடும் மதவெறி பாஜகவோடும் சரியாகத்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்து மதவெறியும் சாதிவெறியும் இரண்டறக் கலந்த ஒன்றுதான். வைகோவின் சாயம் வெளுத்துவிட்டது. வைகோ மீது அவருடைய நாயக்க ஆதிக்க சாதிவெறி செல்வாக்கை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கொதித்துவிடுகிறார்கள் மதிமுககாரர்கள். ஆனால், இப்பகுதிகளில் சென்று விசாரித்தால் தெரியும் வைகோ வையாபுரி கோபாலசாமி நாயக்கராக வீற்றிருப்பது.
குருஞ்சாக்குளம் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் சர்க்கரையை யாரும் மறந்துவிடவில்லை. அதே போல படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றிய வைகோ, வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் இவர்களையும் மறந்துவிடவில்லை. வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதிவைத்துக்கொள்கிறது


இன்னும் இருக்கிறது குருஞ்சாக்குளம் பற்றி எழுத

No comments:

Post a Comment