Saturday, October 17, 2015

உயிருடன் இருப்பது மிக முக்கியம்

ண்டமார்களே! இனி நான் எனக்கு சுயமரியாதை வேண்டும் என தங்களை எரிச்சலடைய செய்ய மாட்டேன்.

ஆண்டமார்களே! தங்களைக் கோபப்படுத்தும்படி நான் எதையும் செய்ய மாட்டேன்.

ஆண்டமார்களே! நிச்சயமாக தாங்கள் கம்பீரமாய் பேசும் சுயமரியாதை போராட்டங்களிலும், கட்சிக் கூட்டங்களிலும், சுதந்திரதின விழாக்களிலும் கலந்துகொண்டு கொடி பிடிப்பேன்.

ஆண்டமார்களே! தங்களுக்கு கொடி பிடிப்பேன், தங்களின் பதாகை ஏந்துவேன். தங்களை அடிவயிற்றிலிருந்து வாழ்த்திப் பாடுவேன்.

சர்வ வல்லமை பொருந்திய ஆண்டமார்களே! நான் நிச்சயமாக தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல அடிமையாக இருப்பேன்.

ஆண்டமார்களே! தாங்கள் கருணைகொண்டு இடது கையால் வீசி எறிவதை வலது கையால் பெற்றுகொண்டு தங்களின் மேன்மையையும் கொடையையும் பற்றி பெருமை பேசுவேன்.

ஆண்டமார்களே! கர்ண பிரபுக்களே! தாகத்துக்கு தண்ணீரோ, புத்துணர்ச்சிக்கு தேனீரோ, அதை சிரட்டையிலோ, அல்லது , பிளாஸ்டிக் கிளாசிலோ, அல்லது தங்கக் கோப்பையிலோ எதில் கொடுத்தாலும் எந்தப் புகாருமின்றி அமிர்தமாய் குடிப்பேன்.

எஜமானர்களே! சாமிமார்களே! தங்களுக்கு சமமாக வர கனவிலும் கூட நினைக்க மாட்டேன்.

ஆண்டமார்களே! அரசியல் பற்றி அரைகுறையாகக் கூட பேசவோ இல்லை நினைக்ககூட மாட்டேன்.

ராஜாமார்களே! எனக்கென எந்த அடையாளங்களையும் உருவாக்கிக்கொள்ளமாட்டேன்.

மாண்புமிகு ஆண்டமார்களே! தங்களையன்றி எனக்கு வேறு முகவரியும் வரலாறும் இல்லை என்பேன். அப்படி ஏதேனும் இருந்தால் நானே அழித்துவிடுகிறேன்.

ஆண்டமார்களே! நான் வானத்தை நிமிர்ந்து பார்க்கவே மாட்டேன் என்று ஒட்டு வைக்கிறேன்.

சாமிமார்களே! நான் ஆண்ட வீட்டம்மா கண்களில் படவே மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் அய்யாவே!

ஆண்டமார்களே! நீங்கள் கம்பீரமாய் காலால் இடும் வேலையை நான் பயபக்தியுடன் எனது கைகளால் செய்வேன்.

என்னை ரட்சிக்கும் ஆண்டமாரே! என்னையும் அறியாமல் குற்றம் குறைகள் நேர்ந்தால் எனது சிறத்தை தங்கள் பாதங்களில் பதித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜாமாரே! நியாயமாரே! சாமிமாரே! என் மீதான குற்றச்சாட்டுகளை எந்த விசாரணையும் இன்றி மன்னித்து அருளுங்கள்.

ஆண்டமாரே! நான் நிச்சயமாக எனது வரலாறு குறித்து இனி பேசவே மாட்டேன்

சாமிமாரே! நிச்சயமாக எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எங்கள் தெருவில் மட்டுமே மாரியம்மாவை கும்பிட்டுக்கொள்கிறேன்.

ஆண்டமார்களே! மிக விரைவாகவே செருப்பு இல்லாமல் நடக்க நான் எனது கால்களைப் பழக்கிக்கொள்கிறேன்.

ஆண்டமார்களே! என்றென்றைக்கும் தங்களின் விசுவாசமுள்ள ஆண்டி ஒருபோதும் தங்களின் அம்பாரம் கணக்கு கேட்கமாட்டேன்.

சாமிமார்களே! தங்கள் கருணையால் அல்லவா நான் வாழ்கிறேன் என்னை மன்னியுங்கள் ஆண்டமாரே!

ஆண்டமாரே! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ள மாட்டேன் என ஒட்டு வைக்கிறேன்.

சாமிமாரே! அவர்கள் மனம் பேதலித்து புரட்சி பேசுகிறார்கள் நான் தங்களின் தீவிர விசுவாசி ஆண்டமாரே!

சாமியே! அய்யாவே! எனது சகோதரர்களின் தவறுகளுக்காக என் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

சாமியே! ராஜாவே எனது சகோதரர்களின் குற்றங்களுக்காக என்னை தண்டித்து விடாதீர்கள்.

அய்யாமாரே! தாங்கள் விரும்பினால் நான் எனது சகோதரர்களின் திட்டங்களை உளவறிந்து சொல்கிறேன்.

ஆண்டமார்களே! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களின் ஏச்சுகளால் ஒரு போதும் நான் உணர்வு பெற்றுவிட மாட்டேன் என்பதை நம்புங்கள்.

சாமிமார்களே! எனக்குத் தெரியும்! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களை சம்ஹாரம் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஆண்டமார்களே! நீங்கள் எப்போதும் என்றென்றைக்கும் சகல உரிமைகளோடும் ஆள நான் எம்மை ஒப்புக்கொடுக்கிறேன்.

சாமிமார்களே! தங்களின் அடிமை என்பதைத் தவிர நான் என்னை ஒரு போதும் மனிதன் என்று கூட உணரமாட்டேன்.

ஆண்டமார்களே! அய்யாமார்களே! சாமிமார்களே! என் விசுவாசத்தின் மீது துளியளவும் ஐயம் கொள்ளாதீர்கள்.

ஆண்டமார்களே! நீங்கள் எப்போதும் என்றென்றைக்கும் சகல உரிமைகளோடும் ஆள நான் எம்மை ஒப்புக்கொடுக்கிறேன்.

ராஜாமார்களே! சாமிமார்களே! தங்களின் பழம்பெருமை மிக்க சட்டங்களால் எம்மை ஆளுங்கள்.

ஆண்டமார்களே! அய்யாமார்களே! சாமிமார்களே! தங்களின் மேன்மைக்கு நன்றி! தங்களின் கருணைக்கு நன்றி! உயிருடன் இருப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்...


No comments:

Post a Comment