Tuesday, February 7, 2012

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்...

எவரும் எனது குளிர் பிரியங்களை

பகிந்துகொள்ள முன்வராதபோது

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்

எரிமலைக் குழம்பைப்போல் கனல்கிறது உள்ளே

எப்போதும் இருண்மையாகவே இருக்கிறது

எப்போதும் தாங்கமுடியாமல்

கனத்துக்கிடக்கிறது மனம்

தவிப்போடு பார்த்தேக்கிடக்கிறது கண்கள்

யாருடைய வரவையோ எதிர்நோக்கி

தீராப்பசி கொண்ட பறவையைப் போல்

என்னை கொரித்துக் கொண்டே வெட்கம்

ஏதோஒன்று வயிற்றில்

அலைகளைப்போல் ஒயாமல் புரள்கிறது

ஒருவரும் எனது இருப்பை உணராதபோது

பிணத்தைப்போல் பாரமாகிறது உடல்

எவரும் எனது குளிர் பிரியங்களை

பகிந்துகொள்ள முன்வராதபோது

எங்கேயேனும் முத்தமிடும் காதலர்களை,

பூக்களை, வண்ணத்துப் பூச்சியை பார்க்க நேர்ந்தால்

கொலையுணர்ச்சி மேலெழ பதற்றமடைகிறேன்

தனிமையில் இருக்கும்போது

தற்கொலைக்கான வழிகளை

தேர்வுசெய்யத் தொடங்குகிறேன்.

மக்கள் கூட்டத்தில் தனிமைப்பட்டுப் போகிறேன்.

அல்லது அவர்கள் என்னை தனித்து

விட்டு போகிறார்கள்...


நறுமணம் வீசிய எனது பேரன்பு

தேங்கிய நீர்நிலையைப்போல

துர்நாற்றம் வீசத்தொடங்குகிறது...

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்

எரிமலைக் குழம்பைப்போல் கனல்கிறது உள்ளே...

No comments:

Post a Comment